Fatigue Treatment: உடல் சோர்வு நீங்கி சுறு சுறுப்பாக இருக்க சில முக்கிய குறிப்புகள்
சோர்வு, மன களைப்பு, உடல் களைப்பு என்பது நமது உற்சாகத்தை பெரிதளவில் துளைத்துவிடும். இந்த சோர்வு எதனால் வருகிறது. அதிக உழைப்பிருந்து அதற்கேற்ற உணவு எடுக்கவில்லை என்றால், மற்றும் நம் உடலுக்கு தேவையான சில குறிப்பிட்ட உயிர் சத்துக்களை சரியாக எடுக்கவில்லை என்றாலும் உடல் சோர்வுஏற்படும்.
உடல் சோர்வு ஏற்பட அடிப்படையான காரணம் இரும்பு சத்து குறைவு. சமவிகித சமஅளவு உணவை உட்கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள், வைட்டமின்கள் சரியான அளவில் உடலுக்கு கிடைக்க வேண்டும். அப்போதுதான் உடலுக்கு தேவையான எனர்ஜி கிடைக்கும். மன அழுத்தம் ஏற்பட்டாலும் உடல் சோர்வு ஏற்படும்.
நமக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது என்றால் இரண்டு விதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் 1. மூளையின் சில ஹார்மோன்கள் மாற்றங்களை ஏற்படுத்தும் அதனால் மூளையில் இருந்து வரும் தொடர்பு பாதிக்கும். இதனால் உடலில் எனர்ஜியே இல்லாதது போல் தோன்றும். 2. இது போன்ற பிரச்சனைகள் இருக்கும்போது சரியான தூக்கம் வராது சரியான தூக்கம் இல்லை என்றால் எனர்ஜி குறைவாக இருப்பது போல் உணருவோம் உடல் சோர்வு இருந்து கொண்டே இருக்கும்.
சோர்விற்கான முக்கிய காரணம் சரியான தூக்கமின்மை. காலை எழுந்தது முதல் இரவு தூங்குவதற்கு முன்வரை பல வேலைகளை செய்கிறோம் அப்போது நம் உடலின் செல்களில் நிறைய சேதம் ஏற்படும். இரவு தூங்கும்போது தான் நம் உடலில் சில ஹார்மோன்கள் சுரந்து அந்த ஹார்மோன்கள் நம் செல்களில் இருக்கிற சேதத்தை சரி செய்யும். இதனால் காலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியாக இருப்பது போல் உணர்வோம்.
நாம் இரவில் சரியாக தூங்கவில்லை என்றால் அந்த செல்கள் சரியாகாது இதனால் காலை எழுந்ததும் புத்துணர்ச்சியே இல்லாமல் சோர்வாக இருப்பதை போல் உணருவோம். இயல்பாக ஒரு மனிதனுக்கு 7 முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் அவசியம். நம் தூக்கத்தின் தரமும் அளவும் சரியாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே சோர்வு இல்லாமல் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
பொதுவாக சில உணவுகள் எனர்ஜியையும், உற்சாகத்தையும் கொடுக்க கூடியது. அதில் ஒன்றுதான் வாழை பழம். சோர்வை நீக்க நம்முடைய முதல் தேர்வு பழமாக இருக்க வேண்டும். உடல் சோர்வு மற்றும் மனசோர்வு இருந்தால் வாழை பழம் சாப்பிடலாம். ஒரு சிலர் இந்த பழம் எடையை அதிகரிக்கும் என்று தவிர்க்கின்றனர். அவ்வாறு நினைப்பவர்கள் உணவின் அளவை குறைத்துக் கொண்டு இந்த வாழைப்பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.
தொடர்ந்து சோர்வு இருந்துக் கொண்டிருக்கிறது என்றால் உடலில் வேறேதும் பிரட்சனை இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். இரும்பு சத்து குறைவினால் சோர்வு ஏற்படும். சர்க்கரை நோய் வருவதற்கான அறிகுறியாகவும் உடல் சோர்வு ஏற்படும், மேலும் சில வகையான நோய்களுக்கு அறிகுறியாகவும் இந்த சோர்வு ஏற்படும் இதனால் தொடர்ந்து சோர்வு இருந்தால் நோய்க்கான காரணத்தை தெரிந்துகொள்ள மருவரின் ஆலோசனைகளை பெறுவது நல்லது.
பாசி பருப்பு, பாதம், நிலக்கடலை, சிவப்பு கொண்டைக்கடலை இவைகளில் புரதச் சத்து நிறைத்திருக்கிறது. இந்த புரத சத்தை எடுத்துக்கொள்ளும் போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், எலும்புகளை பலப்படுத்தும் சோர்வை போக்குவதாகவும் இருக்கும்.
இரும்புச் சத்து குறைவாக இருந்தால் அத்தி பழம், எள்ளு பொடி,கருவேப்பிலை பொடி இது போன்று இரும்புச்சத்தை அதிகரிக்க கூடிய உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். வேறேதும் சத்துக்கள் குறைவாக இருந்தால் கால்சியம் குறைவாக இருந்தால் மோர், கேழ்வரகு, பிரண்டை துவையல் எடுத்துக்கொள்ள வேண்டும். பி12 குறைவாக இருந்தால் ஆட்டு இறைச்சியில் வெள்ளாடு மண்ணீரலை உணவில் சேர்த்துக் கொண்டால் பி 12 சத்து சரியான அளவில் கிடைக்கும்.
இறைச்சியை சாப்பிடாதவர்கள் பாலை குறைவாகவும், மோரை அதிகமாகவும் எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் பி12 சத்து குறைவு உடலில் சரியாகும்.
அளவுக்கு அதிகமாக காபி குடிப்பதால் அதிலுள்ள காஃபைன் மூலமாகவும் உடல் சோர்வு ஏற்படும். பொதுவாக காபி குடிக்கும்போது ஒரு எனர்ஜி கிடைக்கும். சோர்வாகவே இருந்தாலும் ஒரு காபி குடித்ததும் சுறுசுறுப்பாக எல்லா வேலைகளையும் செய்ய முடியும். ஆனால் அதுவே ஒரு நாளைக்கு 4 அல்லது 5 கப் அளவிற்கு காபி குடித்துக்கொண்டே இருந்தால். உங்கள் உடல் அந்த காஃபைனுக்கு அடிக்ட் அதாவது அடிமையாகிவிடும்.
இவ்வாறு இப்பழக்கம் ஏற்பட்டால் அந்த காபி குடித்தால்தான் வேலை செய்ய முடியும் இல்லை என்றால் வேலை செய்ய முடியாது என்ற நிலைக்கு உடலும் மனதும் மாறிவிடும். அளவுக்கு அதிகமாக காபி குடிப்பதால் அதிலுள்ள காஃபைன் உடல் சோர்வை ஏற்படுத்தும். இதனால் காபியின் அளவை குறைத்து கொள்ளுவது நல்லது.
தண்ணீரை சரியாக குடிக்க வில்லை என்றாலும் உடல் சோர்வு ஏற்படும். நம் உடலில் 60% முதல் 70% சதவீதம் வரை தண்ணீர்தான் இருக்கிறது. சரியான அளவில் தினமும் தண்ணீர் குடிக்க வில்லையென்றால் (Dehydration) நீரிழப்பு ஏற்படும். நீரிழப்பு ஏற்பட்டுவிட்டால் உங்கள் உடலில் உள்ள நிறைய உறுப்புகள் வேலை செய்யாது. அதனால் உடல் சோர்வு ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படும். போதுமான அளவில் தண்ணீரை எடுத்து கொள்ள வேண்டும்.
உணவு மட்டுமின்றி கூடுதலாக உடற்பயிற்சி செய்வதும், 10 அல்லது 15 நிமிடம் மூச்சு பயிற்சி, பிராணாயாமம், ஆசனங்கள் செய்வதும் உடல் சோர்வை போக்கும். மேலும் நல்ல நடை பயிற்சி காலையிலும், மாலையிலும் மேற்கொண்டால் சோர்வு நீங்கி உடல் சுறுசுறுப்பாக இருக்கும். மேற்கூறியவைகளை செய்வதன் மூலம் மனம் மற்றும் உடல் சோர்வு நீங்கும்.








