அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. ஒரு சாதாரண காதல் கதையில் கலகலப்பான நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்ச்சிகள் சேர்த்து பியாண்ட் பிக்சர்ஸ் ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.
Happy Raj Movie Review : தந்தை-மகன் உறவு மற்றும் சமூக அந்தஸ்து அடிப்படையிலான கதைக் கரு
‘ஹேப்பி’ ராஜ் என்று அனைவராலும் அழைக்கப்படும் படத்தின் நாயகன் ஆனந்தராஜுக்கு பின்னால் ஒரு விசித்திரமான மற்றும் சங்கடமான அடையாளம் இருக்கிறது. நாயகன் ஆனந்தராஜின் தந்தை ஜார்ஜ் மரியன் குள்ளமாகவும், கட்டையாகவும் இருப்பதை அந்த ஊர் மக்கள் ‘குதிர முட்ட’ என்று கிண்டல் செய்கின்றனர். அவரது தந்தையின் இந்த அடையாளத்தால் “குதிர முட்ட பையன் குட்டி குதிர முட்ட” என்று நாயகன் ஆனந்தராஜை என்று ஊர் மக்கள் கிண்டல் செய்கின்றனர். இதுவே அவர் காதலிக்கும் பெண்கள் அவரை விட்டு விலகிச் செல்ல காரணமாகிறது. இதனால் வெளியூர் சென்றாவது ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவுக்கு வந்து பெங்களூரில் வேலை செய்கிறார்.
‘ஹேப்பி’ ராஜ் பணிபுரியும் இடத்தில் ஒரு மிகப்பெரிய செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த காவ்யா (ஸ்ரீ கௌரி பிரியா) மீது காதல் ஏற்படுகிறது. அவர் தனது குடும்ப பின்னணியை மறைக்க விரும்பாமல் தன் பெற்றோரின் புகைப்படங்களை காதலி காவ்யாவிடம் கொடுத்து உனக்கும் உன் பெற்றோருக்கும் என் பெற்றோர்களைப் பிடித்திருந்தால் மேற்கொண்டு நாம் பேசலாம் என்று கூறுகிறார். அதைத் தொடர்ந்து நிகழும் நிகழ்வுகளை இயக்குனர் கலகலப்பு மற்றும் காமெடி கலந்து வழங்கியுள்ளார்.
Happy Raj Movie Review : நடிகர்களின் சிறந்த பங்களிப்புகள்
படத்தின் நாயகனின் தந்தையாக வரும் ஜார்ஜ் மரியன் ஒரு கிராமத்து ஆசிரியராக, மற்றும் தனது உருவத்தை கேலி செய்பவர்களைக் கண்டும் காணாமல் செல்லும் உயர்ந்த மனிதராக, ஒரு ஹீரோ போல நடிப்பில் மிளிர்கிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு சினிமா உலகத்திற்கு திரும்பியுள்ள அப்பாஸ் தனது பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் எனர்ஜியான இளைஞன் கதாபாத்திரத்தில் நடனம், சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீ கௌரி பிரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த சற்று குறைவான வாய்ப்பே கிடைத்துள்ளது.
Happy Raj Movie Review : படத்தின் கலவையான விமர்சனங்கள்
இப்படத்தின் திரைக்கதை அமைப்பு இன்றைய தலைமுறையினரின் காதல், அதில் உள்ள ஈகோ சிக்கல்களை சிறப்பாக பிரதிபலிக்கின்றன. இப்படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி ஆனது மிகவும் விறுவிறுப்பாகவும் மற்றும் காமெடியாகவும் உள்ளது. தந்தை-மகன் உறவு மற்றும் சமூக அந்தஸ்து என்கிற கோணத்தில் நகைச்சுவை கலந்து ஒரு ஜாலியான குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.