ஐபிஎல் தொடரின் 19வது சீசன் மார்ச் 28-ம் தேதியான நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 2016-ம் ஆண்டு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
ஐபிஎல் தொடக்க விழா ரத்து?
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஜூன் 4-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 11 ரசிகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இந்த ஆண்டு ஐபிஎல் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும், சின்னசாமி மைதானத்தில் 11 இருக்கைகள் உயிரிழந்த ரசிகர்கள் நினைவாக காலியாக வைக்கப்படும் எனவும் தெரிவித்தது.
IPL 2026 Match 1 : ஆர்சிபி மிரட்டல் பந்துவீச்சு
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வுசெய்தார். ஆர்சிபி அணியில் ஜோஷ் ஹசல்வுட், யஷ் தயாள் போன்ற முக்கிய பவுலர்கள் இல்லாததால் சன்ரைசர்ஸ் அணியின் கைகளே ஓங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹசல்வுட்டுக்கு பதிலாக களமிறங்கிய ஜாக்கப் டஃபி அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் என இருவரையும் அடுத்தடுத்து வெளியேற்றி சன்ரைசர்ஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் இஷான் கிஷன் மற்றும் ஹென்ரிச் கிளாசன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
நல்ல ஃபார்மில் இருக்கும் இஷான் கிஷன் 80 ரன்னிலும், கிளாசன் 31 ரன்னிலும் வெளியேற மீண்டும் சன்ரைசர்ஸ் அணி தடுமாறியது. இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசன் இருவரையும் இரண்டு அபாரமான கேட்ச் மூலம் வெளியேற்றினார் ஃபிலிப் சால்ட். ஹைதராபாத் அணியில் எல்லோரும் நடையை கட்ட கடைசியாக இறங்கிய அனிகேத் வர்மாவின் அதிரடியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்களை குவித்தது சன்ரைசர்ஸ் அணி.
கோலி, படிக்கல் அதிரடியில் RCB அபார வெற்றி
202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியில் தொடக்க வீரர் ஃபிலிப் சால்ட் சொற்ப ரன்னில் வெளியேற, பிறகு இம்பேக்ட் வீரராக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 7 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என சின்னசாமி மைதானத்தில் வானவேடிக்கை காட்ட, முறுமுனையில் விராட் கோலி, 5 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என அவருடைய சிறந்த ஃபார்மை வெளிக்கொண்டு வந்தார். அதிலும் எஷான் மலிங்காவிற்கு எதிராக கோலி அடித்த சிக்சர், ரசிகர்களை எழுச்சியடைய வைத்தது. இவர்களின் அதிரடியில் 15.4 ஓவரிலேயே இலக்கை எட்டிய ஆர்சிபி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆர்சிபி அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜாக்கப் டஃபி ஆட்டநாயகன் விருதை வென்றார்.