Gistak Media – Cinema News | Trending News | Latest News

Karur Stampede : கரூர் தவெக பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் 39 பேர் பலி?

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று மதியம் நாமக்கல்லில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு இரவு கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது வரை 39 பேர் (Karur Stampede) உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சனிக்கிழமை காலை முதலே விஜயை காண்பதற்காக தவெக தொண்டர்கள், பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானோர் அப்பகுதியில் திரண்டிருந்தனர்.

கூட்டநெரிசலில் 39 பேர் பலி

ஒருகட்டத்தில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போது கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அப்பகுதியில் கடுமையான நெரிசல் ஏற்பட்டு பலர் மயக்கமடைந்தனர். இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 5 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள், 17 பெண்கள், 13 ஆண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் கரூர் அரசு தலைமை மருத்துவமனையில் தற்போதுவரை 51 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், ஒருவரை தவிர மற்றவர்கள் அனைவரும் பாதுக்காப்பாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை செய்து வருகிறது.

பல்வேறு தரப்பினர் இரங்கல் (Karur Stampede)

Karur Stampede - Gistakmedia

குடியரசுத் தலைவர் இரங்கல் : இச்சம்பவம் குறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் தவெக கூட்ட நெரிசலில் துரதிர்ஷ்டவசமாக உயிர்பலி ஏற்பட்ட துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு (Karur Stampede) எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி இரங்கல் : பிரதமர் மோடி அவர்கள் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கரூரில் நடந்த அரசியல் பிரச்சாரத்தின்போது துரதிர்ஷ்டவசமாக நடந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு வலிமை கிடைக்க வேண்டுகிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்’’ என பதிவிட்டுள்ளார். 

இபிஎஸ் இரங்கல் : தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில், ‘கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

தவெக தலைவர் விஜய் இரங்கல் : தவெக தலைவர் விஜய், கரூர் துயரம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இதயம் நொறுங்கி போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளாலும் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர, சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரை நேரில் சென்று சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சமும்  நிவாரணம் அறிவித்தார். மேலும் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க, அருணா ஜெகதீசன் தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top