Gistak Media – Cinema News | Trending News | Latest News

Registration Department Revenue : பதிவுத்துறை ஒரே நாளில் ரூ.274 கோடி வருவாய் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது

தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் ரூ.274 கோடி அரசுக்கு வருவாய் (Registration Department Revenue) ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து தமிழக பதிவுத்துறை அமைச்சர் திரு.மூர்த்தி அவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் நேற்று ஒரே நாளில் தமிழக அரசுக்கு கிடைத்த வருவாய் குறித்தும் தகவல் வெளியிட்டுள்ளார். வழக்கமாக சுபமுகூர்த்த தினம் மற்றும் நல்ல நாட்களில் புதிதாக வாங்கும் சொத்துகள் பல மடங்காக பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். மேலும் புதிதாக சொத்துக்களை வாங்குவோர் சுபமுகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

கூடுதல் டோக்கன்கள்

சுபமுகூர்த்த தினங்களில் அதிகளவில் பத்திரப்பதிவுகள் (ஆவணப் பதிவுகள்) நடைபெறுவதால், பதிவுத்துறைக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், பொதுமக்களின் ஆசையும் நிறைவேறுகிறது. அந்தவகையில் செப்டம்பர் 4-ம் தேதி ஆவணி மாதத்தின் கடைசி வளர்பிறை சுபமுகூர்த்த தினம் என்பதால், இந்நாளில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200 டோக்கன்களுக்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டது. இந்த கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டதால் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும், பொதுமக்கள் ஆர்வத்துடன் பத்திரங்களை பதிவு செய்து கொண்டனர்.

Registration Department Revenue - Gistakmedia

ஒரே நாளில் ரூ.274.41 கோடி வருவாய் (Registration Department Revenue)

பத்திர பதிவுத்துறை வரலாற்றில் செப்டம்பர் 4-ம் தேதி இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.274 கோடியே 41 லட்சம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் திரு.மூர்த்தி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதற்கு முன் இந்த 2025-26-ம் நிதியாண்டில் ஏப்ரல் 30 அன்று பதிவுத்துறையில் ஒரே நாளில் அரசுக்கு ரூ.272 கோடியே 32 லட்சம் வருவாயே அதிகமாக இருந்து வந்த நிலையில், அந்த சாதனையை முறியடித்து பதிவுத்துறை புதிய சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பதிவுத்துறையில் அதிமுக-வின் கடந்த 10 ஆண்டு ஆட்சி காலத்தில், ஈட்டப்பட்ட மொத்த வருமானம் ரூ.88,844 கோடியாகும். ஆனால் திராவிட முன்னேற்ற கழகத்தின் இந்த 4 ஆண்டு ஆட்சி காலத்தில் மட்டும் தற்போதுவரை ரூ.72,004 கோடி வருவாய் பெறப்பட்டுள்ளதாக பதிவுத்துறை அமைச்சர் திரு.மூர்த்தி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top