Gistak Media – Cinema News | Trending News | Latest News

UPI Transaction Limit : யுபிஐ பரிவர்த்தனை தினசரி வரம்பு ரூ.10 லட்சமாக உயர்வு

கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ (Unified Payments Interface) செயலிகள் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகள் பெறுவதற்கான தினசரி பரிவர்த்தனை (UPI Transaction Limit) வரம்பு ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் முறையில் பணம் பரிமாற்றம் செய்வதற்கு, யுபிஐ பரிவர்த்தனை என்பது  இன்றியமையாததாக மாறி வருகிறது. இந்தியா முழுவதும் சிறிய பெட்டிக்கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை பெரும்பாலும் யுபிஐ மூலமே பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டில் யுபிஐ பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.20.60 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.24.85 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல் யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையானது 1,490 கோடியில் இருந்து 34 சதவீதம் உயர்ந்து 2,001 கோடியாக உயர்ந்துள்ளது.

தினசரி வரம்பு ரூ.10 லட்சமாக உயர்வு

இந்நிலையில், இந்திய தேசிய கட்டண கழகம் (National Payments Corporation Of India) யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான உச்சவரம்பை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி, இன்று முதல் (15.09.2025) தனிநபர்கள் மற்றும் வணிகம் சார்ந்து மேற்கொள்ளும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பயண முன்பதிவு, காப்பீட்டு பிரீமியம், பங்கு சந்தையில் மூலதனமாக முதலீடு செய்தல் போன்ற தேவைகளுக்கு, யுபிஐ மூலம் ஒரே நேரத்தில் 5 லட்சம் ரூபாய் வரை செலுத்தி கொள்ளலாம் என்றும், 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்றும் இந்திய தேசிய கட்டண கழகம் தெரிவித்துள்ளது.

புதிய உச்ச வரம்புகள் (UPI Transaction Limit)

UPI Transaction Limit - Gistakmedia

மேலும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி கட்டணம் செலுத்துவதற்கான வரம்பு 2 லட்சத்தில் இருந்து 6 லட்சம் ரூபாயாகவும், யுபிஐ மூலம் நகை வாங்கினால் (UPI Transaction Limit) ஒரே நேரத்தில் 2 லட்சம் ரூபாய் வரை செலுத்த முடியும் என்றும், 24 மணி நேரத்தில் 6 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில் தனிநபர்கள் தங்களது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொருவரின் கணக்கிற்கு அனுப்பும் பண பரிவர்த்தனை, ஏற்கனவே அமலில் இருக்கும் ரூ.1 லட்சமாகவே தொடர்கிறது. மேலும் கல்வி கட்டணம், மருத்துவ கட்டணம் போன்றவற்றுக்கான பரிவர்த்தனையும் ஏற்கனவேஅமலில் இருப்பது போன்று ரூ.5 லட்சமாக தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்களுக்கு நன்மை

இந்த புதிய யுபிஐ பரிவர்த்தனை வரம்பின் மூலம் வணிகர்கள் பெரிய தொகைகளை செலுத்தும்போது பல பரிவர்த்தனைகளாக பணத்தை பிரித்து அனுப்ப வேண்டிய சிக்கல் இனி இருக்காது. இந்த நடவடிக்கையானது, டிஜிட்டல் இந்தியா பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் எனவும், நிதிச் சேவைகளின் வளர்ச்சிக்கு இது வழிவகுக்கும் எனவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top