Uttarakhand Tunnel - உத்தராகண்ட் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள பணியாளர்கள் 24 மணி நேரத்தில் மீட்கப்பட வாய்ப்பு :
கடந்த 10 நாட்களுக்கு முன் உத்தராகண்ட்டின் உத்தரகாசியில் உள்ள சுரங்கப் பாதையின் (Uttarakhand Tunnel) ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சுரங்கப் பாதையின் உள்ளே வேலை செய்து கொண்டிருந்த 41 தொழிலாளர்களும் வெளிவர முடியாமல் சிக்கி கொண்டனர். வெளிவர முடியாமல் சிக்கி கொண்ட அந்த 41 தொழிலாளர்களை காப்பாற்றும் பொருட்டு அரசாங்கமும் நிர்வாகமும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
ஆக்சிஜன் ஆனது சிறிய குழாய் மூலம் தொடர்ந்து சுரங்கத்திற்குள் செலுத்தப்பட்டு வருகின்றது. அவர்களுக்கு 6 அங்குல குழாய் மூலம் அவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. குளுக்கோஸ் பானம் மற்றும் துண்டுகளாக்கப்பட்ட பழங்கள் போன்றவையும் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. தகவல் தொடர்பை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வாக்கிடாக்கி மற்றும் அதற்கான பவர் பேங்க் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் அதிகாரிகள் தொழிலாளர்களுடன் தொடர்ந்து எண்டோஸ்கோபி கேமரா மூலம் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். அது மட்டுமில்லாமல் அதிகாரிகள் தொழிலாளர்களின் உறவினர்களின் செல்போனில் பதிவு செய்யப்பட்ட பேச்சையும் தொழிலாளர்களை கேட்கச் செய்தனர்.
தொழிலாளர்களுக்கு 21/11/2023 நேற்றிரவு உணவாக வெஜிடபிள் புலாவ் மற்றும் பட்டர் பன்னீர் ஆகியவை சுடச்சுட தயாரித்து பேக்கிங் செய்து குழாய் வழியே அனுப்பப்பட்டது. உத்தரகாசியில் உள்ள சுரங்கத்திற்குள் (Uttarakhand Tunnel) சிக்கியுள்ள 41 தொழிலாளர்களும் நலமுடன் உள்ளதாக வீடியோ ஆனது வெளியிடப்பட்டுள்ளது. அந்த 41 தொழிலாளர்களும் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று இரவுக்குள்) மீட்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.